கீர்த்தனை 192 - அருமையுற நீ இறங்கி
1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்
அருளொளி அன்பேயுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்து
அகமுழுதுமே நிறைந்து வழிந்தோடும்
அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்
2. திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்
திவிய வரமாக வந்து எனதாகும்
தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து
சிறுமை செயும் 'நான்' மறைந்து பறந்தோடி
அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்
3. மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்
மலர்முக சந்தோஷ பண்பும் சுடரான
மகிமையும் நின்னோடு வந்து எனதிதயமே நிரந்து
வளமை வரவே விளைந்து நிலையாக
அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்
4. உரிமையுடனே உவந்து மனமதியெல்லாம் கவர்ந்து
உனதடிமையாய்ப் பரிந்து எனையாளாய்
உனத சுனையாய் சுரந்து அடியருளமே விரிந்து
உதவு நதியாக வந்த பெருமானே
அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்
**********************************************

No comments:
Post a Comment