கீர்த்தனை 066 -எனது கர்த்தரின் ராஜரீக நாள்

எனது கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ வருகுமோ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ?
மனிதசுதனின் அடையாளம்
விண்ணில் காணும் என்றாரே
வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி
வருவேன் என்றாரே
1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே,
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே,
ஜீவனுள்ளோரும் அவருடன் மறு ரூபமாகவே,
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே
2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே
பாவ மனுஷன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே
3. எருசலேமிலிருந்து ஜீவ நதிகள் ஓடுமே
ஏழைகள் மனமகிழ்ந்து கர்த்தரை ஏத்திப் பாடுமே
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே
வானராஜ்ஜிய சேனைகள் யாவும் வந்து கூடுமே
4. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே
நித்திய ஜீவனைப் பெற எந்தன் மனம் துடிக்குமே
No comments:
Post a Comment